இந்தோனேசியா மற்றும் அதன் அண்டை நாடான திமோர்-லெஸ்டே ஆகியவற்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் இருந்து இந்தோனேசிய தீவுக்கூட்டத்திற்கு கிழக்கே உள்ள சிறிய தேசமான திமோர்-லெஸ்டே வரை பெய்த கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது.
கடும் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. அத்துடன், பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இவற்றால் பல ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளன. இந்த அனர்த்தங்களில் சிக்கியிருப்போரை மீட்பதிலும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இந்தோனேசிய மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 42 பேர் காணாமல் போயுள்ளனர் என இந்தோனேசியா பேரிடர் முகாமைத்துவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் ராடித்யா ஜாதி தெரிவித்தார்.
இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் நகராட்சியில் வீடுகள், பாலங்கள் மற்றும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இங்கு மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியை அடைய முடியாமல் மீட்புப் பணியாளர்கள் திணறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
திமோர்-லெஸ்ட் தலைநகர் டிலியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 11 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாங்கள் தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம் என திமோர்-லெஸ்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கு உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அவா்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தோனேசிய தீவுக்கூட்டம் முழுவதும் மழைக்காலங்களில் அபாயகரமான நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்குகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்தோனேசிய நகரமான சுமேடாங்கில் ஜனவரி மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் போர்னியோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தோனேசியாவில் 125 மில்லியன் மக்கள் அதாவது நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேர் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர் என நாட்டில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
காடழிப்புக்களாலேயே இந்தோனேசியா தொடர்ச்சியாக இவ்வாறான பேரழிவுகளைச் சந்தித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.